
இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதுடன், அவர்களில் சுமார் 40 பேர் தினமும் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2022ஆம் ஆண்டில் உலகளவில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதே காலப்பகுதியில், புற்றுநோய் காரணமாக உலகளவில் 10 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கை நிலவரத்தைப் பொருத்தவரை, 2021ஆம் ஆண்டில் மட்டும் புற்றுநோய் காரணமாக 14,986 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புதிதாக பதிவாகும் புற்றுநோயாளிகளில் சுமார் 19,500 பேர் பெண்களாகவும், 16,400 பேர் ஆண்களாகவும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை, முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

