
சமன் ஏகநாயக்க குறித்து சந்திரிகா பண்டாரநாயக்க கருத்து
தற்போதைய அரசாங்கம் நாட்டில் எஞ்சியுள்ள பொது சேவையை பலவீனப்படுத்தி, தகுதியும் அனுபவமும் இல்லாத கட்சி விசுவாசிகளை முக்கிய பதவிகளில் நியமித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணத்திற்கான நிதி அங்கீகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க குறித்து அவர் குறிப்பாகப் பேசியுள்ளார்.
சமன் ஏகநாயக்கவை தனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் உள்ளவர் எனவும், அவர் மிகவும் நேர்மையானதும் தொழில்முறை திறன் மிக்க சிவில் சேவை அதிகாரி என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் நிர்வாக அமைப்புக்கு நீதி நிர்வாகத்தில் ஏற்படும் தலையீடுகள் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர்,
“தொழில்முறை, திறமையான மற்றும் நேர்மையான சிவில் சேவை இல்லாமல் எந்த அரசாங்கமும் நீடிக்க முடியாது.
அரசியல் தலைவர்கள் நிர்வாக அனுபவம் இல்லாவிட்டாலும், அசைக்க முடியாத நேர்மையுடன் இருந்து, நாட்டை நிர்வகிக்க தொழில்முறை அதிகாரிகளை நம்பியிருக்க வேண்டும்.
நமது மகத்தான தேசத்தை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பதை நாம் ஜனநாயக ரீதியாக தீர்மானிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

