
புதிய நீதியமைச்சர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துதுருக்கி நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு
துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனின் அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து துருக்கி நாடாளுமன்றத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டதுடன், அது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கைகலப்பாக மாறியது.
புதிய நீதி அமைச்சராக நீதியரசர் அக்கின் குர்லெக் (Akin Gurlek) என்பவரை நியமிக்க ஜனாதிபதி எர்டோகன் எடுத்த முடிவையடுத்தே நாடாளுமன்றத்தில் இந்த குழப்பம் ஏற்பட்டது.
அக்கின் குர்லெக் நீதி அமைச்சராகப் பதவியேற்கத் தயாரானபோது, எதிர்க்கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவர்களைத் தடுக்க முயன்றதால் மோதல் வெடித்தது.
துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியான ‘குடியரசுக் கட்சி’ (Republican People’s Party) உறுப்பினர்கள் சிலருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் அக்கின் குர்லெக் நீதியரசராகக் கடமையாற்றியுள்ளார்.
இவர் ஆளுங்கட்சியின் பாராட்டைப் பெற்ற ஒருவராகக் கருதப்படுவதே எதிர்க்கட்சியினரின் இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணமாகும் என கூறப்பட்டுள்ளது.

