
தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத் ஜயசூரிய
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பல்லேகலையில் இன்று நடைபெறவுள்ள போட்டி, இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரியவின் கடைசி போட்டியாக அமைய உள்ளது.
உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு தாம் பதவியில் இருந்து விலகுவதாக சனத் ஜயசூரிய முன்னதாகவே அறிவித்திருந்தார்.
ஒப்பந்த காலம் இன்னும் எஞ்சியிருந்தபோதிலும், புதிய மாற்றத்திற்கான அவசியத்தை கருத்தில் கொண்டு பதவியில் நீடிக்க விருப்பமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
2024 ஜூலை மாதம் இந்திய அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற சனத் ஜயசூரிய, அதே ஆண்டின் இறுதியில் அணியின் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையிலான காலப்பகுதியில் இலங்கை அணி 74 போட்டிகளில் விளையாடி 34 வெற்றிகளைப் பதிவு செய்ததுடன், 38 தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேலும் 2 போட்டிகள் முடிவின்றி நிறைவடைந்துள்ளன.
இன்றைய போட்டியுடன் ஜயசூரியாவின் பயிற்சியாளர் பயணம் நிறைவடையவுள்ள நிலையில், அணியின் அடுத்த கட்ட மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

