
இலங்கை புகையிரத திணைக்களம் ஏப்ரல் முதல் ‘ஸ்மார்ட்’ பயணச்சீட்டு முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கிறது
இலங்கை புகையிரத திணைக்களம், கொழும்பு புறநகர் புகையிரத திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ‘ஸ்மார்ட்’ (Smart Ticketing) பயணச்சீட்டு முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய காகித பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் முறைமையை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்தச் சோதனை முறை ஏப்ரல் மாதத்தில் சில நாட்களுக்கு களனிப் பள்ளத்தாக்கு பாதையில் முன்னெடுக்கப்படும்.
நாரஹேன்பிட்டி, நுகேகொடை, மாக்கும்புர, ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய புகையிரத நிலையங்களில் இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிய முறைமையில் நவீன பயணச்சீட்டு சரிபார்ப்பு உபகரணங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இது வினைத்திறனை அதிகரிப்பதுடன் பயணிகளுக்கு மேலதிக வசதியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னோடித் திட்டம் வெற்றியடைந்த பின், முதலில் களனிப் பள்ளத்தாக்கு பாதையிலுள்ள அனைத்து நிலையங்களுக்கும், பின்னர் படிப்படியாக நாடு முழுவதிலுமுள்ள ஏனைய புகையிரத பாதைகளுக்கும் இந்த டிஜிட்டல் முறைமை விரிவுபடுத்தப்படவுள்ளது.
பயணிகளுக்கு இன்னும் பல இலகுவான வசதிகளை உள்ளடக்கி, இந்த ஆண்டிற்குள் முழுத் திட்டத்தையும் நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

