
ஈரானின் புதிய தலைவரிடமிருந்து தனக்கு போர்நிறுத்தக் கோரிக்கை வந்ததாக டிரம்ப் தெரிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் புதிய தலைவரிடமிருந்து தனக்கு போர்நிறுத்தக் கோரிக்கை வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தனது ‘Truth Social’ தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் புதிய தலைவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் புதிய தலைவர் தன்னிடம் போர்நிறுத்தம்செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தப் போர்நிறுத்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டுமானால், ஈரான் முதலில் ஹார்முஸ் நீரிணையை சர்வதேசப் போக்குவரத்திற்காகத் திறந்துவிட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை எப்போது சுதந்திரமாகவும், தெளிவாகவும் திறக்கப்படுகிறதோ அப்போதுதான் போர்நிறுத்தம் பற்றி ஆலோசிக்கப்படும் என்றும், இல்லையெனில் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“ஹார்முஸ் நீரிணை எப்போது திறந்திருக்கும், சுதந்திரமாக இருக்கும் மற்றும் போக்குவரத்து தெளிவாக இருக்கும் என்பதை நாங்கள் முதலில் கவனிப்போம். அப்படி நடக்கவில்லை என்றால், நாங்கள் ஈரானை முழுமையாக அழிப்போம்.” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், ஹார்முஸ் நீரிணை ஒரு முக்கியமான கடல்வழிப் பாதையாகக் கருதப்படுகிறது.
இந்தப் பாதையை ஈரான் முடக்குவது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் என்பதால், அமெரிக்கா இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

