
பாதுகாக்கப்பட்ட தாவரம் கடத்தல் முயற்சி ; சீனப் பிரஜை கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ‘கொத்தல ஹிம்புட்டு’ தாவரத்தை சீனாவுக்கு கடத்த முயன்ற சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 48 கிலோகிராம் எடையுள்ள கொத்தல ஹிம்புட்டு தாவரத் தொகுதியை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயன்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பயணப் பொதிகளுக்குள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 48 கிலோ 600 கிராம் எடையுடைய கொத்தல ஹிம்புட்டு துண்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ‘கொத்தல ஹிம்புட்டு’ பாதுகாக்கப்பட்ட தாவர இனமாகும். இதனை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும்.
சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளின் பேரில், கைப்பற்றப்பட்ட தாவரங்கள் அரசுடமையாக்கப்பட்டதுடன், குறித்த சீனப் பிரஜைக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

