
புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, இன்று (10) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விசேட சேவைகள் இன்று (10) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டை – அநுராதபுரம், அநுராதபுரம் – காங்கேசன்துறை, மருதானை – மாத்தறை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய வழித்தடங்களில் விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதேவேளை, பெலியத்தவிலிருந்து மஹவ வரை இயங்கும் ரஜரட்ட ரெஜினி ரயில் சேவை புத்தாண்டு காலத்தில் அநுராதபுரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை இயங்கும் அலுவலக ரயில், நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) ஆகிய தினங்களில் மாத்திரம் அநுராதபுரம் வரை சேவையாற்றும்.
பொதுமக்கள் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்வதற்கும், பின்னர் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் இவ்விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகளும் விசேடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

