
இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரானுடன் தொடர்புடைய எரிபொருள் கப்பல் அமெரிக்கப் படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையது என சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்கப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ‘மெரின் ட்ராஃபிக்’ தரவுகளின்படி, இது சுமார் 3 லட்சம் தொன் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் கப்பல் என்பதும், இந்த கப்பலுக்கு அமெரிக்க வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தினால் (OFAC) தடைகள் விதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த கப்பல் இந்திய கப்பல் நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையது என்ற தகவலும் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இக்கப்பல் ஏப்ரல் 10ஆம் திகதி வளைகுடா பிராந்தியத்திலிருந்து புறப்பட்டு, ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையின் காலி துறைமுகத்திற்கு அருகாமையில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

