
அமெரிக்கா தடுத்து வைத்திருந்த ஈரானியக் கப்பல் ஊழியர்கள் 6 பேர் விடுவிப்பு -ஏனைய 22 பேரையும் விடுவிக்க தொடரும் பேச்சுவார்த்தைகள்
அமெரிக்காவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் கொடியுடனான கொள்கலன் கப்பலில் இருந்த பணியாளர்களில் அறுவர் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் இன்னும் 22 பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதற்காக ஈரான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி, சுமார் 900 அடி நீளமான இந்தத் தப்பல் அமெரிக்காவின் கடல்சார் தடையை மீறி பயணிக்க முயன்றபோது அமெரிக்க கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.
கப்பலை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மீறிச் சென்றதால், அதன் இயந்திர அறை மீது தாக்குதல் நடத்தி கப்பல் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், இது ஒரு ஆயுதம் தாங்கிய கடற்கொள்ளை நடவடிக்கை என விபரித்தது.
ஈரான் துறைமுகத்தை நோக்கிப் பயணித்த இந்தக் கப்பல் தற்போது அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

