
சீனாவில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை
சீனாவின் ,குவாங்சி மாகாணம் பகுதியில் கடந்த 24 மணிநேரமாக கொட்டித் தீர்த்த கனமழையால், சின்சோ மற்றும் பெய்ஹாய் உள்ளிட்ட நகரங்களில் பல மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஏப்ரல் மாதத்தில் பதிவான மழை, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 53.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளதுடன், ஒரு மணிநேரத்தில் 14.7 செ.மீ. மழை பெய்ததாகவும் அறியப்படுகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக, வெள்ளநீர் மார்பளவு வரை உயர்ந்ததால், சின்சோ நகரின் குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், ரப்பர் படகுகள் மூலம் வீடுகளில் சிக்கியிருந்த 200-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

