
சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்திய லொறிக்கு பொலிஸார் துப்பாக்கிச் சூடு
ஹுங்கம, கட்டகடுவ பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் ஏற்றிச்செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை நிறுத்திய சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த லொறி கால்நடைகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக அறியப்பட்டதையடுத்து, கட்டகடுவ பகுதியில் விசேட வீதித் தடை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எனினும், சந்தேகத்திற்கிடமான லொறி பொலிஸார் அமைத்திருந்த வீதித் தடையை மீறி வேகமாக தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, பொலிஸார் லொறியைத் தொடர்ந்து சென்று பலமுறை நிறுத்துமாறு உத்தரவிட்ட போதிலும், சாரதி வாகனத்தை நிறுத்தாமல் பயணித்துள்ளார். நிலைமை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் லொறியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின்போது லொறியில் பயணித்த நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

