
மட்டக்களப்பு பொது நூலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார் ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.

ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினையும் ஜனாதிபதி மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், குறித்த நூலகத்தினை பொது மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின்பராமரிப்பின் கீழ் உள்ள குறித்த பொது வாசிகசாலையானது மத்தியரசு மற்றும் மாகாண அரசு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்ட நவீன வசதிகளை உள்ளடக்கிய மூன்று மாடி வாசிகசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர, அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஜ், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மேலும் பல உயரதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வில் இறுதியில் மாநகர முதல்வரினால் ஜனாதிபதி பென்னாடை போர்த்து கெளரவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியின் கரங்களினால் வாசிகசாலை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்று ஒன்று நட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

