
எக்காரணிகளுக்காகவும் சுகாதார சேவை பலவீனமடையாது
44 தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பான சுற்று நிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் மாரடைப்பு சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் வீதம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் , ‘‘முதல்நிலை வைத்திய சேவை, வைத்தியசாலை கட்டமைப்பு அபிவிருத்தி, மருந்து விநியோகம், போசணை மட்டம் மற்றும் உலகளாவிய மட்டத்தில் சுகாதார சேவையை திறம்படுத்தல் ஆகிய ஐந்து துறைகளின் ஊடாக சுகாதார சேவையை அபிவிருத்திசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியிலும் இம்முறை அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஆகிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள 44 தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பான சுற்றுநிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
வைத்தியசாலைகள் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலை, பொது வைத்தியசாலை, போதனா வைத்தியசாலை, ஆதார மற்றும் மாவட்ட வைத்தியசாலை என்ற அடிப்படையில் பல வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. இந்த வைத்தியசாலைகளை அபிவிருத்திசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, திருகோணமலை, கேகாலை, அம்பாறை மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவை அபிவிருத்திசெய்வதற்கு 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் நிறைவுபெறும்.
இருதய நோய் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்கு ரூபாய் 1,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இருதய நோய் சடுதியாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் விகிதம் உயர்வடைந்துள்ளது.
வருடாந்தம் 36ஆயிரம் பேர் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 24ஆயிரம் பேர் முறையாக சிகிச்சை பெறுகின்றனர். 22 அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
அநுராதபுரம், குருநாகல், பதுளை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக லினொக் மருத்துவ சாதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத வைத்திய முறைமையை மேம்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவ முறைமைக்கு இணையாக பாரம்பரிய ஆயுர்வேத வைத்திய முறைமையும் அபிவிருத்தி செய்யப்படும்.
எக்காரணிகளுக்காகவும் நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான மருந்து விநியோகத்துக்கு இம்முறை 183 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, மருந்து விநியோகம் சீராக முன்னெடுக்கப்படும்.
சுகாதார சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு இம்முறை தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவையாளர்கள் இன்று (நேற்று) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்தார்கள்.
தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிற்சங்கப் போராட்டத்தை தடுத்துள்ளோம். எக்காரணிகளுக்காகவும் சுகாதார சேவை பலவீனமடையாது என்பதை மக்களுக்கு உறுதியளிக்கின்றோம்’’ என தெரிவித்துள்ளார்.