
மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டு வந்ததால்தான் ஜனாதிபதி இன்று புதுக்குடியிருப்புக்கு சுதந்திரமாக செல்லக்கூடியதாக உள்ளது
“மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று புதுக்குடியிருப்புக்கு சுதந்திரமாக செல்லக்கூடியதாக உள்ளது.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியே அடுத்து அமையவுள்ளது எனவும் அவர் கூறினார்.
மேலும் அவர், ” மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்தால்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் புதுக்குடியிருப்புக்கு சென்று மேடை அமைத்து, மஹிந்த ராஜபக்சவையே விமர்சிக்ககூடியதாக உள்ளது.
மஹிந்த அமைத்த வீதியில்தான் அவர் வடக்குக்குகூட செல்கின்றார். நாம் வேலை செய்தோம். அதனை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள்தான் போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அரசியல் ரீதியில், கொள்கை ரீதியில் எம்முடன் மோத முடியாததன் காரணமாகவே தனிப்பட்ட ரீதியில் சேறு பூச முற்படுகின்றனர். பொய்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் விளங்குகின்றது.
தொழிலாளர்களின் தோளில் ஏறி ஆட்சிக்கு வந்தவர்கள் தொழிலாளர்களை மறந்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச குற்றமற்றவர் என்பதை அநுர ஆட்சிக்குள்ளேயே நிரூபிப்பதற்கு நாம் முயற்சித்துவருகின்றோம். அது நிச்சயம் நடக்கின்றது.
மொட்டு கட்சிமீது பயம் வந்துவிட்டது என்பதாலேயே எம்மை இலக்கு வைத்து தாக்குகின்றனர். எம்மை பார்த்து அவர்கள் பயந்தாலும், நாங்கள் அவர்களுக்கு பயம் இல்லை என்பதை கூறி வைக்க விரும்புகின்றோம்.”என தெரிவித்துள்ளார்.

