
காலாவதியான உரம் மருந்தை விற்பனை செய்த வியாபார நிலையம் சுற்றிவளைப்பு
சட்டவிரோதமான முறையில் காலாவதியான உரம் மருந்தை விற்பனை செய்த வியாபார நிலையம் ஒன்று கம்பளை -கண்டி பிரதான வீதியில் நேற்று (30) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய காலங்களில் உர பற்றாக்குறை நிலவி வந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட உரவகைகள் மேற்படி கடையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அமைய அடிப்படையில், நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பெறுமதியான சட்ட விரோதமான உரம் மற்றும் பூச்சிகொல்லிகளையும் இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவு கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் விவசாய திணைக்கள மற்றும் பீடைகொல்லி பிரிவின் பங்களிப்புடன் கைப்பற்றினர்.

நுகர்வுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பதிவு செய்யப்படாத இரசாயண உரங்கள் காலாவதியான விவசாய இரசாயணப் பொருட்கள் மற்றும் அடையாளம் காணப்படாத வகை உரங்கள் பூச்சிக்கொல்லிகள், மற்றும் அதிக நச்சுத்தன்மையுள்ள விவசாய இரசாயணங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்படி சட்டவிரோத இரசாயணங்கள் அனைத்தும் தினசரி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ உரங்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் விவசாய திணைக்கள மற்றும் பீடைகொல்லி பிரிவு மேற்கொண்டுவருகிறது.

