தற்போதைய அரசாங்கத்தால், வைத்தியசாலைகளில் காணப்படும் அடிப்படை குறைபாடுகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியாதுபோயுள்ளன

தற்போதைய அரசாங்கத்தால், வைத்தியசாலைகளில் காணப்படும் அடிப்படை குறைபாடுகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியாதுபோயுள்ளன

ஒரு நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளாக சுகாதாரத்தையும் கல்வியையும் கருதலாம். இந்த மனித மற்றும் அடிப்படை உரிமைகளை வெறும் பேச்சுக்களோடு மாத்திரம் சுருக்கிக் கொள்ளாது, செயல்பாடுகள் மூலமாகவும் பாதுகாக்க வேண்டும்.

நமது நாட்டின் இலவச சுகாதார சேவையில் தற்போது உபகரணங்கள், வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றன.

அவ்வாறே, வைத்தியசாலைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் இல்லாமையினால் மக்களின் உயிருக்கு ஆபத்தும் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரூ. 31 இலட்சம் மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரமொன்றையும், (Dialysis Machine), 6.5 இலட்சம் மதிப்புள்ள RO plant இயந்திரமொன்றையும், மொத்தமாக 39 இலட்சம் மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை அநுராதபுரம், கெபிதிகொல்லாவ தள வைத்தியசாலைக்கு நேற்றைய (16) தினம் நன்கொடையாக வழங்கி வைத்ததன் பிற்பாடு,கெபிதிகொல்லாவ நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் அனுராதபுரம், கெபிதிகொல்லாவ பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில், கெபிதிகொல்லாவ சந்தைத் தொகுதி வளாகத்தில், கிராமத்துக்கு கிராமமாக, வீட்டுக்கு வீடாக எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை இடம்பெற்றது.

அச்சமயம், விடுக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் முகமாகவே நேற்றைய தினம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

இரத்த மாற்று இயந்திரங்களுக்கு கூட தட்டுப்பாடு காணப்படுகின்றன. இதன் காரணமாக, நோயாளிகள் தனியார் துறை மூலம் பணம் செலுத்தி இந்த சேவைகளைப் பெற்றுக் கொண்டதும் நடந்துள்ளது.

இலவச சுகாதாரம் என்பது பணம் செலுத்தி சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றல்ல, இது நலன்புரி அரசின் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வளப் பற்றாக்குறையால், சுகாதார சேவை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சில வைத்தியசாலைகளில் அடிப்படை உபகரணங்கள் இல்லாமையால், பணம் செலுத்தி சில சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டி காணப்படுகின்றன.

இருப்பதை விட சிறந்த மட்டத்தில் சுகாதார சேவையை வலுப்படுத்துவோம் எனக் கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று இலவச சுகாதாரத்துறையை பலவீனப்படுத்தியுள்ளது.

சிறுநீரக நோயாளிகளுக்குத் தேவையான டயாலிசிஸ் சேவைகளுக்கான உபகரணங்களை கடையிலிருந்து கொண்டு வர வேண்டி காணப்படுகின்றன.

இதற்குத் தேவையாக காணப்படும் நிதிகளை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )