
கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப்புலானய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா – வெலிவேரிய பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.
குறித்த துப்பாக்கி, டக்ளஸ் தேவானந்தாவுக்கு, இலங்கை இராணுவத்தினால் சட்டரீதியாக வழங்கப்பட்டது என ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரை தடுத்து வைத்து விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

