
புத்தாண்டுக்காக ஏப்ரல் 9 முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.
இந்த விசேட சேவை ஏப்ரல் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தூர இடங்களுக்காக தினசரி சுமார் 250 மேலதிக பஸ்களை தடையின்றி இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு மேலும் மேலதிக பஸ்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊர்கள் அல்லது வெளியிடங்களுக்கு செல்பவர்களுக்காக ஏப்ரல் 9 முதல் 13 வரையும் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக, ஏப்ரல் 17 முதல் 21 வரையும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் ஏப்ரல் 9ஆம் திகதி முதல் பயணிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு மேலதிக தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை இலங்கை ரயில்வே திணைக்களம் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் புத்தாண்டுக்கான விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
தற்போது சேவையில் உள்ள ரயில்களுக்கு மேலதிகமாக கடலோரப் பாதை, வடக்கு நோக்கிய பாதை மற்றும் பிரதான பாதைகளில் பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

