
இந்தியாவில் இலங்கையர் தாக்குதல் ; அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்
இந்தியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இச்சம்பவம் மனித உரிமைகளின் தீவிர மீறலாகும் என்றும், இது அண்டை நாடுகளுக்கிடையேயான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பொதுமக்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்வது எந்த நாட்டின் முதன்மைப் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
மேலும், இந்திய மீனவர்கள் நீண்டகாலமாக இலங்கையின் கடல் எல்லையை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதுபோல இருந்தபோதிலும் இலங்கை மீனவர்கள் பல சந்தர்ப்பங்களில் சகோதரத்துவ உணர்வுடன் செயல்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால், கட்டுப்பாடற்ற மீன்பிடி நடைமுறைகள் காரணமாக இலங்கையின் கடல் வளங்கள் பாதிக்கப்பட்டதுடன், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்திய அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை பிரதிநிதிகளுடன் பல மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள் அனைத்தும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிதல் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

