
போலி நாணயங்களை விற்க முயன்ற இருவர் கைது
புதையல் மூலம் எடுக்கப்பட்ட தங்க நாணயங்கள் என கூறி தங்க மூலாம் பூசப்பட்ட போலியான நாணயங்கள் சிலவற்றினை ஏழு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்வதற்கு முயன்ற சந்தேக நபர்கள் இருவரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் நுவரவெவ பகுதியில் 08 ஆம் திகதி நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் போலியான தங்கமூலாம் பூசப்பட்ட நாணயங்களையும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 37,42 வயதுடைய அநுராதபுரம் கல்கடவள பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.