
ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாமே தேசபந்து தென்னகோனின் சட்டவிரோத நியமனத்தை முதலில் எதிர்த்தோம்
தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பிலான பிரேரணையொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட போதிலும், முதலில் அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே நடவடிக்கை எடுத்தது.
கடந்த அரசாங்க காலப்பிரிவில் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் சபாநாயகரும் அரசியலமைப்பை மீறி, அரசியலமைப்பு பேரவையின் பணிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி தேசபந்து தென்னகோனை நியமிக்க முற்பட்ட போது, ஐக்கிய மக்கள் சக்தியே அதனை எதிர்த்தது.
அப்போது நானும் கபீர் ஹாசிமும் அவருக்கு எதிராக வாக்களித்தோம். இப்போது அவரை எதிர்க்கும் ஆளுந்தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மௌனம் காத்து வந்தனர். தேசபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பை மீறியமைக்கு முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த கொள்கையை இன்றைய அரசாங்கம் கடைபிடிப்பது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முழு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி உறுதிபூண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.