
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவிற்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துமிந்த திஸாநாயக்க இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததது .
வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T -56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார் .
கடந்த 20 ஆம் திகதி வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 2 பெண்களிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T -56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 69 வயதுடைய பெண்ணும் கசக்கஸ்தானை சேர்ந்த அவரது மருமகளும் வெள்ளவத்தை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் இந்த விடயம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவந்துள்ளனர்.
பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பாக பல விபரங்கள் தெரியவந்துள்ளது.
தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியை முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வழங்கியமை தெரியவந்துள்ளது.
துமிந்த திஸாநாயக குறித்த பெண்ணின் வீட்டு சமையல்காரரின் மூலம் , வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த அந்த பெண்ணுக்கு துப்பாக்கியை வழங்கியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

