எதற்கும் தயாராக இருங்கள்

எதற்கும் தயாராக இருங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கையே சரியானது என்பதையும், எமது அரசியல் தீர்விற்கான அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் காலம் வெளிப்படுத்தி வருவதாக தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உறுதியுரை எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈ.பி.டி பி. கட்சியின் கொள்கையும், கட்சியினால் வலியுறுத்தப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டத்தினை ஆரம்பமாகக் கொண்ட அரசியல் தீர்வு வழிமுறையுமே சாத்தியமானது என்பதை அண்மைய அரசியல் நிலைவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொட்டும் பார்க்க மாட்டோம். என்றெல்லாம் முழங்கியவர்கள், எதனை மறுத்தார்களோ அவற்றை ஏற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்கின்றார்கள்.

எனவே எமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் நம்பிக்கையுடன் ஆழமாக கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோன்று, எமது கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களும் அடிப்படைகள் அற்றவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

தற்போதுகூட, யாழ்ப்பாணத்தினை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விரைவாக கைதுசெய்யப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

ஆளுந்தரப்பினர் நினைத்தால் விரும்பியவாறு விசாரணைகளை மேற்கொள்ளலாம், எமக்கு எதிராகவும் அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.

எமக்கு எதிராக அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்குமே தவிர, உண்மையாக இருக்காது.

எவ்வாறாயினும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாரான மனோநிலையுடன், எமது அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )