
இந்தியா ஊடாக ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களென கூறப்படும் இலங்கையர்கள் மூவர் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டனர் .
குறித்த மூவரும் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து டெபிட் கார்ட் , கிரெடிட் கார்ட் மற்றும் 46,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டன.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34, 43 மற்றும் 33 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
தமிழகத்திற்குள் ஊடுருவிய பின் மூவரும் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மரைன் பொலிஸார் தெரிவித்தனர் .

