
இலங்கை-கனடா முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் கனேடிய அரசாங்கத்தின் விசேட கவனம்
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஸ் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கு இடையேயான சந்திப்பொன்று அண்மையில் (24) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மக்களின் நம்பிக்கையை வென்ற மற்றும் ஊழல் இல்லாத புதிய அரசாங்கத்துடன் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த கனேடிய அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்த தூதுவர், இதற்காக கனேடிய வணிக சமூகம் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், வர்த்தக கூட்டாண்மைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து சபைத் தலைவருடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்திய தூதுவர், இலங்கையின் எதிர்கால வளர்ச்சி செயல்முறைக்கு மேலும் ஆதரவை வழங்குவதாகவும் வலியுறுத்தினார்.
கனேடிய அரசாங்கத்தின் வர்த்தகம் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் திருமதி. க்வென் தெமெலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

