
சஷீந்திர ராஜபக்ஷ ஒகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது
மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, செவனகல கிரியிப்பன் வெவ பகுதியில் உள்ள காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் உட்பட பல சொத்துக்கள் 09.05.2022 அன்று நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்தன.
சொத்துக்கான இழப்பீட்டின் போது, அந்த காணி இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என அடையாளப்படுத்தப்பட்டதால் இழப்பீடு வழங்க மறுக்கப்பட்ட போதிலும், அதற்கு மாறாக, இழப்பீட்டு அலுவலகத்தில் இணைக்கப்பட்ட சில அரசு அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்ததாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இழப்பீட்டை பெற்றதன் மூலம் ஊழல் நடவடிக்கைகள் , மகாவலி அதிகாரசபையின் சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

