
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல் ஆரம்பம் !
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, இந்த முறை கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக வருகை தரமாட்டார்கள் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட ‘A’ மற்றும் ‘Aa’ பட்டியல்களை புதுப்பிப்பதற்கான வீடுகளுக்கு மட்டுமே கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் வருகை தருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வாக்காளர் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே உத்தியோகத்தர்கள் செல்ல உள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நடைபெறும் முறையை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அவதானிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும், தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியானவரா அல்லது இல்லையா என்பது குறித்து கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் வழங்கும் பரிந்துரைகளையும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு முறைகேடுகள் அவதானிக்கப்பட்டால், அதனைப் பற்றி கணக்கெடுப்பு உத்தியோகத்தருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கவும், அதற்கான பிரதியொன்றை சம்பந்தப்பட்ட மாவட்ட பிரதி அல்லது உதவித் தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அனுப்பவும் முடியும் என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

