
சபாநாயகர் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது
பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தீர்மானித்துள்ளார்” என்ற தலைப்பில் வெளியான செய்தி அடிப்படையற்ற பொய்யான செய்தி என கௌரவ சபாநாயகர் வலியுறுத்தியிருப்பதாக இலங்கை பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் ஊயழிர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இலங்கை பாராளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும், அவ்வாறான ஆலோசனைகளையும் வழங்கவில்லையென்றும் இலங்கை பாராளுமன்ற செயலகம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், உணவறைப் பகுதிக்குள் சில ஊழியர்கள் இரகசியமாக மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்ததையடுத்து சபாநாயகர், இது தொடர்பான ஆலோசனையை வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பொய்யானது என்றும், அவ்வாறான சூழ்நிலை உருவாவதற்கு இடமளித்தமை தொடர்பில் சபாநாயகர் பாராளுமன்றத்தின் உயரதிகாரிகளைக் குற்றஞ்சாட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் எந்தவிதமான அடிப்படையுமற்ற பொய்யான தகவல்கள் என்றும் பாராளுமன்ற செயலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

