
நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு ; 975 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன் இலங்கை பொலிஸாரால் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 975 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது நாடு முழுவதும் 979 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

