
பசிபிக் பெருங்கடலில் மீண்டும் அமெரிக்க தாக்குதல் – இருவர் பலி
பசிபிக் பெருங்கடலின் கிழக்கு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் US Southern Command (SOUTHCOM), இந்த தாக்குதலின் போது “இரண்டு போதைப்பொருள் தொடர்புடைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும், தாக்குதலுக்குள்ளான அந்த கப்பலும், உயிரிழந்த இரு நபர்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாக நிரூபிக்கும் எந்த ஆதாரங்களையும் SOUTHCOM இதுவரை வெளியிடவில்லை.
2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் பதிவான முதல் சம்பவத்திலிருந்து இதுவரை, பசிபிக் மற்றும் கரீபியன் கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 34 தாக்குதல்களில் குறைந்தது 126 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என உலக நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றன.
Airwars என்ற கண்காணிப்பு அமைப்பின் பதிவுகளின்படி, 2026 ஆம் ஆண்டில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதல் தாக்குதலாக இந்த சமீபத்திய தாக்குதல் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

