
இலங்கை – சிம்பாம்பே இன்று மோதல்
டி20 உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரின் குழு ‘B’ பிரிவில் முதலிடத்தை தீர்மானிக்கும் முக்கிய போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
இரு அணிகளும் ஏற்கனவே ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டி குழு முதலிடத்தை நிர்ணயிக்கும் என்பதால் அடுத்த சுற்றில் சாதகமான போட்டி அமைப்பை பெறுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி, மைதான சூழ்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தி இந்தத் தொடரில் வலுவான அணியாக திகழ்கிறது.
ஓமான் மற்றும் அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை, பின்னர் அவுஸ்திரேலியாவை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமது ஆற்றலை வெளிப்படுத்தியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்கவின் நேர்த்தியான சதமும், குசல் மெண்டிஸின் தொடர்ச்சியான அரைசதங்களும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளன.
பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் மஹீஷ் தீக்ஷனா முக்கிய தருணங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
அதேசமயம், மதீஷ பத்திரனவின் தனித்துவமான பந்து வீச்சு நடைமுறை மற்றும் துஷான் ஹேமந்தவின் லெக்-ஸ்பின் ஆகியவை அணிக்கு கூடுதல் பலத்தை வழங்குகின்றன.
மறுபுறம், ஜிம்பாப்வே அணி அவுஸ்திரேலியாவை அதிர்ச்சியூட்டும் விதமாக வீழ்த்தியதுடன், அயர்லாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டதன் மூலம் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியது.
பிரையன் பென்னட் அவுஸ்திரேலியா மற்றும் ஓமான் அணிகளுக்கு எதிராக அசைக்க முடியாத இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். அனுபவமிக்க Sikandar Raza,Craig Ervine மற்றும் Ryan Burl ஆகியோர் மத்திய வரிசையில் நிலைத்தன்மையை வழங்குகின்றனர்.
இந்நிலையில், இரு அணிகளும் முதலிடத்தை நோக்கி கடும் போட்டியில் ஈடுபட உள்ளதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

