
நுரச்சோலை Real Time Data பிரகாரம் 9 ஆவது நிலக்கரி கப்பலும் தரம் குறைந்தது
தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 நிலக்கரி கப்பல்களும் தரம் குறைந்தவை என்று சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆவது நிலக்கரி கப்பலும் தரம் குறைந்தது என்று தரவுகளோடு பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தெரிவித்தார்.
ஹோமாகம ஸ்ரீ கல்யாணதர்ம அபினவாராம விகாரையில் போதி மரத்தை சுற்றி அமைக்கப்பட்ட தங்க சுற்று வேலியை திறந்து வைக்கும் நிகழ்வில் (23) கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மின் உற்பத்தி நிலையத்தின் எரிப்பு பதிவேடுகள் மற்றும் ஒரு மின் அலகு உற்பத்திக்கு கிலோவாட் மணிக்கு தேவையான நிலக்கரியின் கிலோகிராம் அளவு ஆகியவற்றின்படியும், நுரச்சோலை மின் நிலையம் 900 மெகாவாட் உற்பத்தி செய்கிறது என்ற பதிவுகளின்படியும், 300 மெகாவாட் கொண்ட முதல் மற்றும் மூன்றாவது அலகுகளின் தரவுகளின் அடிப்படையிலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 ஆவது நிலக் கரிக் கப்பலும் தரம் குறைந்தது என்று உறுதியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தெரிவித்தார்.
முதல் அலகில் 250 மெகாவாட்டும், மூன்றாவது அலகில் 275 மெகாவாட்டும் உற்பத்தியாகியுள்ளது என்றும், இது 300 மெகாவாட்டாக அமைந்திருக்க வேண்டும் என்றும், இரண்டாவது அலகில் மட்டும் சரியாக 300 மெகாவாட் உற்பத்தியாகியுள்ளது என்றும், அதற்கு காரணம் அந்த அலகில் ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்தர நிலக்கரி பயன்படுத்தப்பட்டதே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் 25 முதல் 27 கப்பல்கள் வரை தென்னாப்பிரிக்காவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது என்றும், ஆனால் இந்த நிலக்கரி தரம் குறைந்தவை என்று சாட்சிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், நிகழ்நேர பதிவுகளின்படி நிலக்கரி மூலம் பாரதூரமான ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் குறிப்பிட்டார்.
மகா சங்க ரத்னத்திற்கு “கேடுகெட்டவன்” என்று அவமதிக்கும் இந்த அரசாங்கம், கேடுகெட்டவனையைம் தாண்டி நிலக்கரி மூலம் நடத்தும் ஊழல் மற்றும் மோசடியினால் மக்களுக்கு மிகவும் பாரதூரமான பாதிப்பே ஏற்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் மேலும் தெரிவித்தார்.

