
ஹட்டனில் குடிநீர் பிரச்சினை மோதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
ஹட்டன், ருவான்புர மடுகல்ல ஜனபதய பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மோதலில் 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் கடும் காயங்களுடன் கண்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்,ருவான்புர ஜனபதய, மடுகல்ல தோட்டத்தில் வசித்து வந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் ஏனைய 5 காயமடைந்தவர்களும் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர்களில் உயிரிழந்தவரின் சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தில் நிலவும் பிரச்சினை தொடர்பாக கடந்த 24 ஆம் திகதி முதல் பலமுறை வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சினை பின்னர் மோதலாக மாறி தாக்குதலில் முடிந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

