
பாலைதீவுக்கு சென்ற பக்தர்கள் படகு விபத்து ; இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கடலில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த ஐவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களில் இருவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
பாலைதீவு அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குருநகர் பகுதியில் இருந்து ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கடலில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
படகு விபத்துக்குள்ளானபோது அதில் பயணித்த பலர் கடலில் விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் இருந்ததாகவும், பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் படகில் பயணித்திருந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை உறுதியாக தெரியாததால், கடலில் மூழ்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் அப்பகுதி கடற்தொழிலாளர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதீபன்

