
கிழங்கன் வைத்தியசாலை முன் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது
டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை ஏற்பட்டது என்று கூறப்படும் சம்பவத்தை கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கவிருந்த போராட்டத்திற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைய (08) ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் பொலிஸார் கோரிக்கையை ஏற்று, நீதவான் பி. தமேந்தி பெர்னாண்டோ இந்த உத்தரவை பிறப்பித்தார்.
1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(01) பிரிவின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிழங்கன் ஆதார வைத்தியசாலை நுழைவாயில், ஹட்டன்-நோர்வூட் பிரதான வீதி மற்றும் பொதுமக்கள் கூடும் ஏனைய இடங்களில் சட்டவிரோத ஊர்வலங்கள், போராட்டங்கள் அல்லது ஒன்றுகூடல்களை நடத்துவதைத் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் துணை மேயர் பெருமாள் சுரேந்திரன் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்குறித்து கருத்து தெரிவித்த கணபதி கனகராஜ்,
“இன்று சர்வதேச மகளிர் தினத்தில், நாங்கள் போராட்டம் செய்ய சென்றதில்லை. பிரேத அறையில் அவமரியாதை ஏற்பட்ட யுவதிக்கு அஞ்சலி செலுத்தவே நாங்கள் சென்றோம். ஆனால், நோர்வூட் பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகமும் இணைந்து நீதிமன்றத் தடையைப் பெற்று எங்களை தடுத்துள்ளனர். அந்த யுவதிக்கு நேர்ந்த அசம்பாவிதம் குறித்து இதுவரை உரிய விசாரணை நடைபெறவில்லை; குற்றவாளிகள் கைது செய்யப்பட்டவர்களல்ல.” என தெரிவித்தார்.

