
“மத்திய கிழக்கு பிராந்திய இலக்குகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள், அமெரிக்கா- இஸ்ரேலினால் பலாத்காரமாக திணிக்கப்பட்ட போருக்கு வழங்கப்படும் பதிலடி மட்டுமே “- ஈரான் வெளியுறவு அமைச்சர்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் “பலாத்காரமாக திணிக்கப்பட்ட” ஒரு போருக்கு வழங்கப்படும் பதிலடி மட்டுமே என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார்:
“இது நாங்கள் தேர்ந்தெடுத்த போர் அல்ல. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் எங்கள் மீது திணிக்கப்பட்டது.
நாங்கள் தற்காப்புக்காகவே (Self-defense) செயல்படுகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.
எவ்வித தூண்டுதலுமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் அவர் சாடினார்.
அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்: ஈரானின் பதில் தாக்குதல்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் சொத்துக்களை இலக்கு வைத்தே அமையும். அந்த இலக்குகள் அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் அமைந்திருந்தாலும், அமெரிக்காவிற்கு சொந்தமான அந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயங்காது என அவர் தெரிவித்தார்.
உயரிய தலைவர் தெரிவு: ஈரானின் அடுத்த உயரிய தலைவரைத் (Supreme Leader) தேர்ந்தெடுப்பது என்பது நாட்டின் ‘நிபுணர்கள் குழுவினால்’ (Assembly of Experts) தீர்மானிக்கப்படும் முற்றிலும் ஒரு உள்நாட்டு விவகாரமாகும்.
டிரம்பிற்கு பதில்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்களை நிராகரித்த அமைச்சர், அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை ஈரான் மக்களுக்கு மட்டுமே உள்ளது என்றார். “புதிய உயரிய தலைவர் விரைவில் நிபுணர்கள் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுவார். இது ஈரான் மக்களின் வேலை, வேறு யாருடையதும் அல்ல,” என அவர் மேலும் கூறினார்.

