
கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் மின்தடை
கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இந்த மின்தடைகளை வழமை நிலைக்குக் கொண்டு வருவதில் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்ததன் பின்னர் நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் போது முறையான நியமனக் கடிதங்களை வழங்காதது உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் நேற்று (09) மாலை 3.00 மணிக்கு தொடங்கியதாகவும், அது 24 மணிநேரம் தொடரும் என்றும் இலங்கை மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மின்சார சபையை ரத்து செய்து புதிய நிறுவனங்களின் கீழ் கொண்டு வருவதன் மூலம் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளில் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது என மின்சார சபை மாற்றத்திற்கான பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன குறிப்பிட்டுள்ளார்.

