அமைச்சரவை முடிவு செயலாற்றுகை அதிகாரிகள் குழு ஜனாதிபதியை சந்தித்தது

அமைச்சரவை முடிவு செயலாற்றுகை அதிகாரிகள் குழு ஜனாதிபதியை சந்தித்தது

அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பாக 2025.03.17 ஆம் திகதி அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்துவதை கண்காணிக்க பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது.

அந்த நிறுவனங்கள் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படாமை, வழங்கப்பட்ட அதிகாரங்கள் போதுமானதாக இல்லாமை அல்லது பொருந்தாமை, அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை, தனியார் துறை மிகவும் செயற்திறனாகச் செய்தல் மற்றும் ஒரே மாதிரியான அல்லது ஒத்த செயல்பாடுகளைச் செய்யும் பல நிறுவனங்கள் இருத்தல் போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு அமைச்சரவை, அரசாங்கத்திற்குச் சொந்தமான 124 வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை வழங்கியுள்ளது.

அந்த முடிவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காலாண்டுக்கு ஒருமுறை அமைச்சரவைக்கு அறிக்கையிடும் பொறுப்பும் மேற்படி அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவின் மேற்பார்வையின் கீழ், அமைச்சரவை முடிவை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை, சில நிறுவனங்கள் தொடர்பான முடிவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி இந்தக் குழுவைக் கூட்டினார்.

குழுவின் தலைவரும் பிரதமரின் செயலாளருமான பிரதீப் சபுதந்திரி மற்றும் குழுவின் ஏனைய உறுப்பினர்களான, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி. ஜயசுந்தர, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் (உள்ளக நிர்வாகம்) ஹிரன்சா களுதந்திரி, தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், அரச வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.டி.ஏ. ரொட்ரிகோ, பிரதமரின் மேலதிக செயலாளர் மற்றும் குழுவின் செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )