
தேவேந்திரமுனை அருகே பலநாள் மீன்பிடி படகில் 123 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது
தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண் ஜயசேகர தெரிவித்தார்.
குறித்த பலநாள் மீன்பிடி படகு இன்று (16) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
பரிசோதனையின் போது அந்த படகில் 123 கிலோகிராம் ஹெரோயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண் ஜயசேகரின் தகவல்படி, இதன் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

