
உடவலவயில் சுமார் 4.5 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாத் தோட்டம் முற்றுகை
உடவலவ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அம்பேகமுவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது கஞ்சாத் தோட்டமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுமார் 3 அடி உயரம் கொண்ட சுமார் 155,000 கஞ்சா செடிகள் கண்டெடுக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 4.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முற்றுகையின் போது சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் இராணுவத்தினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

