
கரந்தெனிய ராஜுவின் வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்ய துப்பாக்கி மீட்பு
பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரான ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘கரந்தெனிய ராஜு’ என்பவருக்குச் சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, புதைக்கப்பட்டிருந்த நிலையில் நவீன ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 9 மி.மீ (9mm) வகை கைத்துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்ட இந்தச் சோதனையின் போது இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கரந்தெனிய ராஜுவினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பல படுகொலைச் சம்பவங்களுக்கு இந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸ் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

