
சம்மாந்துறையில் இரவு உணவகங்களில் திடீர் சுகாதாரச் சோதனை
சம்மாந்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை இலக்கு வைத்து நேற்று (27) விசேட திடீர் சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நடவடிக்கை, நான்கு விசேட குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மொத்தமாக 42 உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் பரிசோதிக்கப்பட்டன.
சோதனைகளின் போது சில உணவகங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டு, அசுத்தமான முறையில் உணவு தயாரித்தலும் கையாளுதலும் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது.
இவ்வாறு குறைபாடுகள் காணப்பட்ட இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளில் மாவட்ட சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர், உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர், பிரிவு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தெரிவித்தார்.

