
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன விரிவுரையாளர்களின் தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கவனம்
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் விரிவுரையாளர்களின் தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் சந்திப்பொன்று, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன விரிவுரையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையில் 2026.04.29 ஆம் திகதி இசுருபாய கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த நிறுவனத்தின் விரிவுரையாளர்களின் தொழில்சார் தரத்தினை உயர்த்துதல், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்து வரும் பதவியுயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் கல்விசார் கொடுப்பனவுகள் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. இப்பிரச்சினைகளில் சிலவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தீர்வுகள் குறித்தும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொண்டு, அந்த நிறுவனத்தின் நோக்கு மற்றும் அடிப்படை இலக்குகளுக்கு அமைய அதன் செயற்பாடுகளை வரிசைப்படுத்துதல் பற்றிய விபரங்கள் மீதும் பிரதமர் தனது கவனத்தைச் செலுத்தினார்.
கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர், அண்மைக்காலத்தில் தொழில்நுட்பம் மிக வேகமாக மாற்றமடைந்து வரும் ஒரு விடயமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டதோடு, புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிவைக் கொண்ட நவீன தொழில் வல்லுநர்களை உருவாக்குவதற்கு, மாணவர்களுக்குத் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி அறிவைப் பெற்றுக்கொடுக்கும் அனைத்து நிறுவனங்களும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பிரதான பணிகளுடன் ஒத்துப்போகும் வகையில், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழில்சார் வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், அவர்களுக்குரிய கொடுப்பனவுகளைப் படிப்படியாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, பல்வேறு செயற்திட்டங்கள் மற்றும் பாடவிதானங்களைப் புதுப்பிக்கும்போது, நிர்வாகச் சபை மற்றும் கல்விப் பிரிவுக்கு மேலதிகமாகக் கைத்தொழில் துறையினரையும் அதனுடன் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் கைத்தொழில் துறைக்குத் தேவையான நேரடி அறிவும் ஆற்றலும் கொண்ட நிபுணர்களை உருவாக்குவது இலகுவாகும் எனவும் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், உயர்கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

