
நியூசிலாந்து துணைப் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்திற்கு நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் மக்களின் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதிப் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் நடைபெற்று வரும் சாதகமான முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்த நியூசிலாந்து பிரதிப் பிரதமர், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தை பாராட்டிய பிரதிப் பிரதமர், இந்த வேலைத்திட்டம் இலங்கைக்கு நிலையான அபிவிருத்தியை அடைய உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தச் சூழலில், எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி உதவியை மேலும் விரிவுபடுத்த நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதிப் பிரதமர் தெரிவித்தார்.

