
”மாணிக்க கங்கைக்கு அருகில் இருக்கும் கட்டிடத் தொகுதி எனக்குரியதல்ல”
“கதிர்காமம், மாணிக்க கங்கைக்கு அருகில் இருக்கும் கட்டிடத் தொகுதி எனக்குரியதல்ல என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். கதிர்காமம் பிரதேசத்தில் எந்தவொரு கட்டிடத் தொகுதியையும் நிர்மாணிப்பதற்கோ அல்லது முன்னெடுத்துச் செல்வதற்கோ எனக்கு எவ்வித அவசியமோ அல்லது தேவையோ இல்லை” என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் மாணிக்க கங்கைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குரியது என்று வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும்,
”கதிர்காமம், மாணிக்க கங்கைக்கு அருகில் வேறொருவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதி எனக்கு சொந்தமானது என்று தவறாக தகவல் குறிப்பிடப்பட்ட செய்தி இதற்கு முன்னர் சமூக ஊடகங்களில் வெளிவந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை ஒருசில தொலைக்காட்சிகளினூடாக வெளியிடப்பட்ட செய்தியொன்றில் அந்த கட்டடத்தொகுதி தொடர்பில் குறிப்பிடும்போது எனது பெயர் மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கட்டடத்தொகுதியின் உரிமை தொடர்பில் கடந்த காலங்களில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணையுடன் தொடர்பில் நான் அறிவிப்பொன்றை பெற்றுக்கொடுத்திருந்தேன்.
இதுதொடர்பில் என்னிடம் விசாரணை செய்வதற்கு காரணம் அந்த கட்டடத்தொகுதிக்கு மின் இணைப்பை பெற்றுக்கொடுப்பதற்காக ‘ஜீ.ராஜபக்ஷ’ என்ற நபரொருவரின் பெயரில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பமொன்று மாத்திரமே.
அந்த விண்ணப்பத்தில் சரியான கையொப்பமும் இடப்பட்டிருக்கவில்லை. கையொப்பம் இடவேண்டிய இடத்தில் தெளிவற்ற கிறுக்கலொன்றும் இருந்தது.
இந்த தவறான செய்தி தொடர்ச்சியாக வெளியிடப்படுவதால் சகலரும் அறிந்துகொள் வதற்காக, கதிர்காமம் மாணிக்க கங்கைக்கு அருகில் இருக்கும் கட்டடத்தொகுதி எனக்கு உரியதில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கதிர்காமம் பிரதேசத்தில் எந்தவொரு கட்டடத்தொகுதியையும் நிர்மாணிப்பதற்கோ அல்லது முன்னெடுத்துச் செல்வதற்கோ எனக்கு எவ்வித அவசியமோ அல்லது தேவையோ இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

