
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் நிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு17 வயது இளைஞன் பலி
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிடிப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டியுள்ளனர்.
எனினும், அந்த வேன்நிறுத்தப்படாமல் மண்கும்பான் திசையை நோக்கி வேகமாகச் சென்றுள்ளது.
இதனையடுத்து, வீதித் தடையில் இருந்த பொலிஸார் வேன் குறித்து ஏனைய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர்.
அப்போது அந்த வழியாக வந்த கைட்ஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வாகனமும் அந்த வேனை வழிமறிக்க முயற்சித்தது. பொலிஸார் வேனை நிறுத்த முதலில் வேனை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்த போதிலும், வேன் நிறுத்தப்படவில்லை.
தொடர்ந்து அந்த வானை நோக்கி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதன் சாரதி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த வேனின் பின் இருக்கைகள் அகற்றப்பட்டிருந்த நிலையில், அதில் பயணித்த மேலும் இருவரை கைட்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

