
எம்.பி. அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு சிறைச்சாலை நடைமுறைகளுடன் அழைத்து வரப்பட்டார்.
கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம், கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. காணி உரிமை தொடர்பான பிரச்சினையொன்றின் போது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த காணி தொடர்பான உரிமை வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அக்காணி தமக்குச் சொந்தமானது என அர்ச்சுனா தரப்பும், மற்றுமொரு பெண்ணும் உரிமை கோரி வருகின்றனர்.
இதற்கிடையில், சம்பவம் நடந்த நாளில் பாராளுமன்ற உறுப்பினர் அக்காணியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குச் சொந்தமானது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

