
பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்கு விசேட ஏற்பாடுகள்
‘‘பெருந்தோட்ட மக்களின் நிலையான அபிவிருத்திக்கான சிறந்த முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மக்கள் அதிகாரத்தைத் தமது சிறப்புரிமையாகக் கொண்டவர்களே வரவு செலவுத் திட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். முறைமை மாற்றத்துக்கான தொடர்ச்சியை ஆரம்பித்துள்ளோம்’’ என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவி ருத்தி அமைச்சு மீதான விவாதத் தில் உரையாற்றுகையிலேயே மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர், ‘‘எமது அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஒருமாத காலமாக நடைபெற்றது. எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறந்த யோசனைகளை முன்வைத்திருந்தார்கள். இருப்பினும், ஒருசிலர் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருந்துகொண்டு கருத்துகளைக் குறிப்பிட்டார்கள். இதற்கு வரவு செலவுத் திட்டத் தினூடாக தீர்வுகாண முடியாது.
பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில்தான் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சகல தரப்பினருக்கும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் நிலையான அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மக்கள் வழங்கிய அதிகாரத்தை தமது சிறப்புரிமையாக பயன்படுத்திக் கொண்டவர்களே வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இவற்றை கருத்திற்கொள்ளப் போவதில்லை.
வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் பற்றி பேசப்படுகிறது. கடந்த காலங்களில் லொத்தர் சீட்டு வழங்குவதைப்போன்று பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதனால் பட்டதாரிகள்தான் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள். முறையற்ற நியமனங்கள் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே செயற்பட முடியும்” தெரிவித்துள்ளார்.