காதலனுக்காக மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை கொள்ளையடித்த காதலி உள்ளிட்ட 7 பேர் கைது

காதலனுக்காக மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை கொள்ளையடித்த காதலி உள்ளிட்ட 7 பேர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த டிக்டாக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை கொள்ளையடித்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்று (29) கைது செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் டிக்டாக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார்.  குறித்த இளைஞனுடன் டிக்டாக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும் , காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும் , தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை கொள்ளையடித்து , அதனை காதலனிடம் கொடுத்துள்ளார். 

வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் கொள்ளையடித்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். 

யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். 

அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த யுவதி , அவரது காதலன் , யுவதி வீட்டில்  நகைகளை கொள்ளையடிக்க உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி , நகைகளை விற்க உதவியவர்கள் , நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )